![](pmdr0.gif)
nenjcu viTutUtU on
tiruvaNNAmali sri IcAnyanjAna tEcikar
(in tamil script, unicode format)
திருவண்ணாமலை ஸ்ரீஈசான்ய ஞான தேசிகர் மீது
நெஞ்சு விடுதூது
Acknowledgements:
Etext preparation: Dr. N. Ganesan, Houston, Texas, USA
PDF and Web version: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland
This webpage presents the Etext in Tamil script but in Unicode encoding.
To view the Tamil text correctly you need to set up the following:
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha,
Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer
and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).
ii)Use a browser that is capable of handling UTF-8 based pages
(Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil fontchosen as the default font for the UTF-8 char-set/encoding view.
. or
© Project Madurai 1999 - 2003
to preparation of
electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
are
http://www.projectmadurai.org/
குறிப்பு: கணினிக் குழுக்களில் திருவண்ணாமலை ஈசானியமடஞ் சென்றதாக அன்பர் ஒருவர் எழுத, அம்மடத் தேசிகர்பால் நெஞ்சை அனுப்பிய தூதைக் கணியேற்றம் செய்கிறேன். நூலாசிரியர், பாட்டுடைத் தலைவர் பெயர்கள் இன்னும் தெரியவில்லை. இருபதாம் நூற்றாண்டில் எவ்வாண்டு நூல் இயற்றப்பட்டது என்றும் அறிகிலேன். இக் கணிப்பதிப்புக்கு ஆதாரம் 1953-ல் வௌியான திருவருணை ஸரீ ஜயலட்சுமி பதிப்பகத்தாரின் இரண்டாம் பதிப்பு ஆகும். -
நா. கணேசன், ஹூஸ்டன், டெக்சாசு.
திருவண்ணாமலை ஸ்ரீஈசான்ய ஞான தேசிகர் மீது
நெஞ்சு விடுதூது
சீர்பூத்த நல்லருணை ஈசான தேசிகன்மேல்
ஏர்பூத்த தூதொன் றிசைக்கவே - நீர்பூத்த
செஞ்சடையான் காலின்று செம்மையுட னேயெனது
நெஞ்சடைய வைத்தேன் நிசம்
நூல்
கலிவெண்பா
ஓங்காரத் துள்ளே உறும்பொருளாய் உத்தமர்கள்
ஆங்கார மின்றி அறைமனுவாய்த் - தூங்காமல்
உற்றார்தம் சிந்தை உயர்ஆ தனமீதே
பற்றோடு நின்ற பரமாகிக் - கற்றோரும்
கல்லாக் கயவரும் கண்ணிற் கதியளிக்கும்
உல்லாச னாகி உயர்மறையின் - நல்ல
பொருளாகி நின்ற புனித அடியார்
அருளாரச் செய்யும் அழகன் - இருளார்ந்த
கண்டமொடு துண்டமதிக் கண்ணி அணிந்திதழி
மண்டு கனஞ்சிரத்தின் மன்னுவித்தோன் - அண்டர்
பணியும் அரிதன் பழங்கண் அறுத்தோன்
அணியும் புலியாடை அண்ணல் - தணிவில்
அருண கிரிநாதன் ஆனந்தன் என்றும்
கருணை உருவாம் கடவுள் - தரணி
புனலனல்நீள் காலாய்ப் புகழ்வௌியாய் என்றும்
தனிமதியும் ஆன்மாவும் தானாய் - நினைவார்க்கு
அன்னதுவே யாகி அமையும் அபிராமன்
என்னை யுடைய இளமுலையாள் - தன்னை
இடமுடையான் ஞாலத்தில் எம்போல்வார் தம்மைக்
கடமுடையச் செய்வான் கருதித் - திடமுடைய 10
ஆனைத்தோல் நீக்கி அருங்காவி தோய்த்தஎழில்
தானைத்தோ லாகத் தரித்தழகார் - மானை
விடுத்துநற் கட்டங்கம் வேய்ந்து தீருநீறு
எடுத்துடலம் எல்லாம் இசைத்தே - தொடுத்த
அரவாதி நீக்கி அருங்கண் மணியை
விரவா திருக்க விசைத்துத் - தரமாகச்
சாத்தி அழகாகச் சங்கரனே தானென்ன
நேத்தி யுடனறியும் நீர்மைக்கா - வேய்த்த
திருநாமந் தன்னுடனே சீரருணை வைப்பில்
ஒருவாமல் ஈசானத்து உற்றே - வருவார்தம்
சித்தத்தே ஆர்கின்ற சித்தசவேள் செய்கைமுதல்
எத்தத்தை யும்நீக்கி இன்பமதைச் - சுத்தமுடன்
ஈவானை எண்ணுகின்றார் எண்ணு வடிவமெலாம்
ஆவானை அஞ்ஞத்தே ஆர்வார்பால் - மேவானை
அன்பர் அனுபவமாம் ஆகாச ஊரதனில்
இன்ப முடனே இருப்பானைத் - துன்பில்
மறைமுடிவென் றோதும் மதகரியின் மேலே
இறையளவும் நீங்காது இசைவாய்க் - குறையறவே
தங்கி மதத்தினர்தம் தன்மைகளுக் கேற்பத்தான்
அங்கங்கு இலகும் அழகனைத் - தங்கி 20
இருக்குமது நம்மையன்றி யேதுமில்லை யென்னா
உரைக்கும் உபநிடத ஒண்தூசு - இரைக்கும்
மணிநாவாம் காலின் மகிழ்ந்தடியார் தூக்கித்
துணிவோடு காட்டும் துவசன் - அணியோடே
பக்குவர்கள் கண்டு பரவி நடக்கவைத்த
சிக்கில் மறையென்னும் செங்கோலான் - தக்கவர்கள்
எண்ணிக் கழித்தால் இலங்கும் எழிலுண்மை
நண்ணும் இலக்கியமா நன்னாடன் - மண்ணதனில்
புக்குழலா வண்ணம் புனிதர் தமையாளும்
பக்குவமென் றோதும் பரியினான் - புக்கோர்
நிலையாகக் கண்டு நிலைத்து நிலையில்
மலையாமை என்னும் மலையான் - கலையோதிக்
காலடையா நின்றவர்கள் கண்ணீரோ டேயிசைக்கும்
மாலடையாப் பாவென்னும் மாலையினான் - சால
இரவணலை நீக்க எழிலடியார் கொண்ட
சிரவணமாம் செய்ய முரசான் - கரவெல்லாம்
தானந்த மாகத் தனையடைந்தார் தாங்கண்ட
ஆனந்த மானஉயர் ஆறுடையான் - வானந்தம்
தங்கி எழில்காட்டும் தண்மடத்தி லேமேவி
எங்கள் இடர்தவிர்க்கும் ஈசானன் - துங்கக் 30
குருநாதன் ஞானக் குருநாதன் என்றும்
ஒருநாதன் ஆகும் உரவோன் - திருநாதன்
ஆனவனும் வானவரும் அண்மி அடிபணியும்
ஞானகுரு மாதேவன் நாயேன்றன் - ஈனவுடல்
ஆதியெலாம் கைக்கொண்ட அண்ணல் அடியேனை
நீதியுடன் ஆண்ட நிருமலனை - ஏதமெலாம்
நீக்கி அடைந்தாரை நித்தியமாச் செய்தருளும்
பாக்கியனை யென்னுடனே பன்னாளும் - ஏக்கமற
வாழ்மனமே நீபோய் வழிபாடு செய்குவையே
தாழ்தியலை யென்பதுயான் தானறிவேன் - ஆழ்கடலின்
ஒத்த விழியாரை ஓர்ந்துற்ற அந்நாளில்
சித்தமே நீயதுவாய்ச் சேர்ந்தனையே - வித்தை
அதனை உணர்போதில் அன்னதுவாய் நின்றாய்
எதுவேனும் ஆவாய் எனினும் - அதனிடையே
என்னோடே யன்றி இருந்த இடங்காணேன்
இந்நாளில் நீதனியே ஏகினால் - உன்னைக்
கலைக்கோட்டை இட்டஎழிற் காரிகையார் ஆன
முலைக்கோட்டை யார்கள் முடுகி - நிலைக்கோட்டை
செய்யவரு வார்அவரைச் சேராதே சேராதே
வையமதை மெய்யென்னும் வாதியர்கள் - மெய்போல் 40
பிதற்றும் உரையதனைப் பேணாதே பேணின்
அதற்குள் ஒருபயனும் ஆராய் - மதத்தில்
உறைபொருளை ஆராமல் ஊர்வீதி நின்றே
பறையடிப்பார் தம்மைநீ பாரேல் - முறையாய்த்
தருமம் புரிவார்போல் தக்காரை ஏசும்
கருமிகளைக் கண்ணாலும் காணேல் - வருமித்
துறவிற் பயனேது சொல்லுமெனும் கெட்ட
மறவியரை நீவழியில் மன்னேல் - குறைவில்
அருளுடையார் போல அசடெழுதித் தூற்றும்
குருடர் இடத்தும் குறுகேல் - சுருதி
மொழியறிந்தார் போல முனிவரரை ஏசும்
இழிசனரைக் கண்டால் இணங்கேல் - பழியினொடு
பாவம் வருமென்று பாராது பல்நூலும்
ஆவா பழிப்பாரை அண்ணாதே - நீவா
தருகின்றோம் ஞனமெனச் சாற்றுவார் பின்னை
அருகொன்றி நின்னையே ஆய்வார் - திருகன்றி
வேறொன்றுங் காணாரவ் வீணரைநீ விட்டகல்தி
ஆறொன்றும் கோடீர அண்ணல்தனைப் -பேறொன்ற
உண்மை யுடன்புகழும் உத்தமரை ஏசுகின்ற
வெண்மையரை என்றும்நீ மேவாதே - வண்மையுடன் 50
செம்பொருளைத் தேடாது செம்பொருளைத் தேடுகின்ற
வம்பரிடை அன்பினைநீ வையாதே - அம்புவியில்
வேதாந்தம் ஓதியதை வேணபடி அச்சாக்கிப்
போதாந்தன் என்றொருபேர் போக்கியே - வேதாந்தம்
என்னே பணமளிப்ப தில்லையினிச் சித்தாந்த
நன்னேயங் கொள்வமென நாடியே - பின்னே
சிவதீக்கை கொண்டு சிவனுருவைக் கண்டு
பவமாற்றி விட்டதுபோல் பாடி - இவண்நோக்கின்
பிச்சையன்றி வேறொன்றும் பேணற் கிலையிதுவும்
நச்சில் இலச்சையென நாடியே - உச்சி
அரிமதமே முன்னிரண்டும் ஆயாது சொற்றாம்
கரிபலவும் இஞ்ஞான்று கண்டேம் - உரியீர்!
வருதிர் இதிலென்று வாயறைந்து வாணாள்
பெரிதும் உளதேல் பினையும் - குருதி
தருப்பணமா வைக்கின்ற சாத்தேயன் ஆகிக்
கருத்தொழிலீண் டுண்டென்று காட்டி - விருப்பம்
அதிலின்றிப் பின்னை அரிவையர்தோள் சேர்ந்தே
இதிலாகும் நன்மை இதுவே - மதியுடையோர்
கொள்ளப் படுமதாம் கோயில் இவர்பகமே
உள்ளணைந்து பார்மின் எனவோதிக் - கள்ளை 60
அருந்தி அழியும் அசடர் அநேகர்
பொருந்தி யுளதுஇப் புவனம் - திருந்தி
இதுகாறும் வந்த எழில்மனமே அன்னார்
பொதுபோல் உரைத்த புகலை - மதியாதே
ஊனருந்திக் கள்ளும் உடன்மாந்தி ஓர்வறலே
ஈனமறல் என்பாரை எண்ணாதே - மாநிலத்தில்
சாதனையைச் செய்யாதார் சாற்றும் மொழிகளெலாம்
வாதனையைச் செய்யும்நீ வாராதே - பாதையிலே
பேரான் மருட்டுகின்ற பேய்களுண்டு பேதையர்போல்
ஆராதே அன்னா ரிடத்தறைந்தேன் - நேராகத்
தம்மதமே மெய்ம்மதமாச் சாற்றும் மதமென்பார்
அம்மதத்தின் தெய்வத்தை ஆராயார் - இம்மதத்தின்
சின்னத்தை யேன்கொண்டீர் செப்புவீர் என்றுரைப்பார்
என்னத்துக் கீதிடுவ தென்றோரார் - பின்னைத்
திடவழக்கை விட்டுச் சிவசிவா தங்கள்
மடவழக்கே மெய்வழக்கா மன்ன - நடவழக்கை
மாற்றுவார் வேறான மாதிரியா யும்பொருளைச்
சாற்றுவார் தம்மையே தாமறியார் - நீற்றை
அணியும் அடியார் அவர்மடத்தர் அன்றேல்
பணியும் இயல்பு படியார் - துணியும் 70
பொருளெதுவோ இன்னார் புரட்டில் மருளேல்
ஒருபொழுதும் சொன்னேன் உணர்தி - கருவழிய
வேதமொடு சூதன் விளக்கும் உரையேனும்
ஏதமே என்பாரை ஏயாதே - போதமே
சித்தராய் இவ்வுலகில் சேர்ந்தோம் சிவன்முதலாம்
சுத்தரையாம் கண்டோம் துகளேதும் - இத்தரையில்
முல்லை முறுவல் முகிழ்முலையார் மாட்டினும்
இல்லை எமக்கென்று இசைத்துத்தம் - பல்லை
இளித்துப் பலரிடத்தும் ஈண்டித் திருநீறு
அளித்துச் சிலசொல் அறைந்து - குளித்து
விழிமூடி வந்தான் விமலன் எனக்கூறி
அழிவேதும் இல்லேம் அறிதி - பழிபோட
வந்த புலியை வகிர்ந்தாம் எனக்கூறிச்
சந்தையில் நாய்க்குத் தவிக்கின்ற - மந்திகளைக்
கிட்டினவர் எல்லாரும் கெட்டார் அவர்களும்பின்
மட்டிஉடல் நோயதனால் மாள்கின்றார் - கிட்டி
அவரை அடைந்தால் அறிவகலும் கண்டாய்
இவரை அகல்தி இனிநீ - பவரை
வணங்குவதும் தீதென்று வாய்ஞானம் பேசும்
துணங்கை அநேகம் சுலவும் - இணங்கி 80
அவரோடு சேர்ந்தால் அருஞானம் போகும்
பவரோகம் சாரும் பதையேல் - தவிராது
உனக்கேன் இதுவெல்லாம் ஓதுவதென் றாலோ
தனைக்காட்டி நின்றானைச் சார்ந்தே - எனக்காண
எல்லாமுஞ் சொல்லி இறைஞ்சி வரமாட்டாய்
நல்லாய்நீ வெண்பளிங்கின் ஆர்நிறம்போல் - எல்லாமும்
பற்றுவையே பற்றில் பதங்கெடுமே ஆதலினால்
உற்றுரைத்தேன் உன்றனக்கிவ் வுண்மையினை - மற்றினிநீ
ஆர்மதத்தும் சாராமல் அண்ணா மலைஅடைதி
ஏர்மிகுத்த கோவிலுக்குள் ஏகுதிமுன் - கார்மிகுத்த
தாரையென ஊற்றுமத தந்தியடி வந்தனைசெய்து
ஆரையணி செஞ்சடையா னாரிடத்தே - சீரையெலாம்
கொண்டமர்ந்த சுந்தரியாம் கொற்றொடியைக் கும்பிடுதி
இண்டைமுகீ என்னையாள் என்றுசொலி - மண்டை
கரங்கொண்ட கங்காளன் காமர் அடியைச்
சிரங்கொண்டு தாழ்தி திரும்பி - வரங்கொண்ட
அண்ணல் சினகரம்விட்டு அன்பின் வௌியாகி
வண்ணமணி வீதி வலமாக - நண்ணி
அமரர் பணியும் அபிராமன் ஆன
குமரன் அடியைக் குறித்துத் - திமிரம் 90
அகல ஒளிரும் அருணா சலத்தை
இகலது அறவே இறைஞ்சிப் - புகல
வினைகள் அறுமவ் வியன்சிலம்பைச் சுற்றி
எனையுடையான் ஈசானம் எய்தி - வினையே
அகல்தி எனநீ அகத்தெய்தி அண்ணல்
தகவில் வடிவைத் தலையால் - மிகவும்
பணிவாய்ப் பணிந்து பணிந்து சுழன்றே
அணைவாய் குருநாதன் ஆர்ந்த - துணிவாய்
அணையருகில் ஆகி அடிமலரில் வீழ்ந்து
பணிதி சிறுநாயேன் பாவம் - தணிய
எழுதி கரங்கள் இரண்டும் சிரமேல்
தொழுதி உறஅமைத்துச் சூழ்தி - அழுதி
கருணா கரனே கமலா லயனே
அருணா சலனே அரனே - பொருள்நீ
அறிவித்தால் அல்லாமல் ஆர அறியேன்
செறிவித்தி என்று சிலம்பி - முறையே
விமல அமல கமல நயன
சமல ரகித சதுர - கமலம்
அதனில் உறையும் அழக குழக 100
மதனம் விதனம் அகலும் - மதன
சகல புவன உயிரும் உனது
தகமை உறுவ தலது - தகவாய்
அறிய எவரும் அருகர் அலர்கள்
குறிய சிறிய வடிவ - பிறிவில்
சகுண நிகுண அசல சகல
தகுதி உடைய உறுவ - பகுதி
தனையின்றி நின்ற தலைவ நினையே
அனையின்றி உண்டானாய் ஆக - நினைவொன்றிக்
காண எனைவிடுத்தான் கண்டேன் அருள்புரிக
தாணுவே என்றுநீ சாற்றிநல் - பாணி
நிலைமை உறும்வண்ணம் நீகரைந்து போற்றி
தலைமை தனையுடையான் தாளைத் - தலைமேலாக்
கொண்டு வாய்மொழியைக் கூறிப் பதிலறிந்து
மண்டி எனதிடத்தில் மன்னிநீ - அண்டியே
கண்ட பொருளதனைக் காமர் இடத்தெய்தி
உண்டருளில் நெஞ்சேநீ ஓங்கு. 108
This file was last revised on 20 October 2003